ஆன்மிகம்

கடன்கள் கரைந்து மன மகிழ்ச்சி பெற எளிய பரிகாரம்!

எம்மில் பலர் தொழிலதிபராக இருந்தாலும், தொழில் முனைவோராக இருந்தாலும், சில்லறை விற்பனையில் ஈடுபடுவதாக இருந்தாலும், தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களாக இருந்தாலும் கடன் என்பது இல்லாமல் இருக்காது. 

ஒவ்வொருவருடைய சக்திக்கேற்ற அளவுக்கு கடன் என்பது இருந்துகொண்டே தானிருக்கும். கடன் தூக்கத்தை விரட்டியடித்து மனதை பாடாய்ப்படுத்தும் விடயம். கடன் இல்லாமல் இருப்பவர்களே நிம்மதியானவர்கள் என எண்ணுபவர்களும் உண்டு.‌

இன்னும் சிலர் கடன்களுக்காக தவணை முறையில் வட்டியைக் கட்டி கட்டி தங்களது உழைப்பை மற்றவர்களுக்கு பணமாக்கி வருகிறார்கள்.‌ அத்தகையவர்களின் உழைப்பு, அவர்களுக்காக பயன்படாமல் கடன் கொடுத்தவர்களின் வளர்ச்சிக்காக பயன்படுகிறது என வருத்தப்படுபவர்களுண்டு. இவர்கள் கடன்களில் இருந்து விடுதலை பெற எளிய பரிகாரத்தை எம்முடைய ஆன்மிகப் பெரியோர்கள் முன்மொழிந்திருக்கிறார்கள்.

உங்களது வீட்டுக்கு அருகே இருக்கும் பெருமாள் ஆலயத்துக்கு சென்று, அங்கே இருக்கும் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மரை தரிசிக்க வேண்டும். ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மரை எப்போது, எப்படி தரிசிக்க வேண்டும் என்ற விதிமுறையும் உண்டு. 

ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மரை வழிபடுவதானால், பௌர்ணமி தினத்துக்கு முன் வரும் பிரதோஷ தினத்தன்றோ அல்லது சுவாதி நட்சத்திரம் வரும் தினத்தன்றோ உங்களது வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும்.

மேலும், ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மருக்கு இளநீர், பன்னீர், தேன், மஞ்சள், பச்சரிசி மா, சந்தனம், திருமஞ்சன பொடி ஆகியவற்றின் மூலம் அபிஷேகம் செய்து பிரத்தியேக அலங்காரம் செய்து உங்களுக்குப் பிடித்த நைவேத்தியத்தை படைத்து வழிபட வேண்டும். 

இதன்போது

”ஓம் வஜ்ர நாகாய தீமஹி

தீஷ்ண தம்ஸ்ரீய தீமஹி

தந்நோ நரசிம்ம பிரசோதயாத்” எனும் மந்திரத்தை 12 முறை உச்சரிக்க வேண்டும்.

இந்த அபிஷேகத்துடன் கூடிய லட்சுமி நரசிம்மர் வழிபாட்டை பன்னிரண்டு மாதங்கள் தொடர்ந்து செய்துவரும்போது உங்களது கடன்கள் கரைந்து, மன மகிழ்ச்சி பெருகுவதை அனுபவத்தில் உணரலாம்.

Back to top button