உலகச் செய்திகள்

காசாவில் மருத்துவமனை மீது மீண்டும் இஸ்ரேல் விமானத் தாக்குதல்….!

காசா வீதிகளில் இஸ்ரேல் இராணுவ வீரர்களுக்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடைபெற்று வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில் காசாவில் அல்-ஷிபா மருத்துவமனைக்கு அருகிலுள்ள மருத்துவமனையின் நுழைவாயிலுக்குச் செல்லும் பிரதான சாலைக்கு மிக அருகில் இஸ்ரேல் இராணுவம் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. குறித்த தாக்குதலால் அல் – ஷிபா மருத்துவமனை பெரும் சேதமடைந்துள்ளதுடன், அங்குள்ள எக்ஸ்ரே பிரிவு உட்பட முக்கிய துறைகளின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினருக்கிடையிலான உக்கிர போர் 2 ஆவது மாதத்தில் நுழைந்துள்ளது. இஸ்ரேலின் தரை படைகள் காசா நகரின் மையப்பகுதிக்குள் நுழைத்திருப்பதாக அந்நாட்டு இராணுவ மந்திரி யோவ் கேலன்ட் தெரிவித்திருந்தார். ஆனால் ஹமாஸ் அமைப்பு இதனை மறுத்துள்ளது. போரை நிறுத்தும்படி உலக நாடுகளின் தலைவர்கள் தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வரும் நிலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாகு அதனை நிராகரித்துள்ளார். காசாவின் வடக்கு பகுதியில் இஸ்ரேல் இராணுவம் வான் மற்றும் தரை வழி தாக்குதல்களை தொடர்ந்து தீவிரப்படுத்தி வருவதால் அங்குள்ள மக்கள் கூட்டம் கூட்டமாக தெற்கு காசாவை நோக்கி படையெடுத்து வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 15 ஆயிரம் பேர் வடக்கு காசாவை விட்டு வெளியேறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Back to top button