உலகச் செய்திகள்

சுவீடனில் குர்ஆன் எரிப்பு – சதி நடவடிக்கையாக இருக்கலாம் என அமெரிக்கா சந்தேகம்

சுவீடனில் ஆர்ப்பாட்டமொன்றின்போது, புனித குர்ஆன் எரிக்கப்பட்ட வெறுக்கத்தக்க செயலானது ஒரு சதி நடவடிக்கையாக இருக்கலாம் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

சுவீடனின் தலைநகர் ஸ்டொக்ஹோமிலுள்ள துருக்கிய தூதரகத்துக்கு முன்னால் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது, சுவீடன் – டென்மார்க் வலதுசாரி அரசியல்வாதியான ரஸ்முஸ் பலுதான் புனித குர்ஆனை எரித்தார்.

இச்சம்பவத்துக்கு ஐநா, துருக்கி, கத்தார், இந்தோனேஷியா, சவூதி அரேபிh, கத்தார், ஐக்கிய அரபு இராச்சியம் உட்பட பல நாடுகள் ஏற்கெனவே கண்டனம் தெரிவித்துள்ளன.

இச்சம்பவத்துக்கு எதிராக யேமன் மற்றும் ஈராக்கில் ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றன.

சுவீடனின் பிரதமர் உல்ப் கிறிஸ்டர்சனும் இச்சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்திருந்தார். ‘கருத்துச் சுதந்திரமானது எமது ஜனநாயகத்தின் அடிப்படையாக உள்ளது. ஆனால், சட்டபூர்வமான ஒன்று பொருத்தமானதாக இருக்க வேண்டும் என்பதல்ல. பலருக்கு புனிதமானதாக உள்ள நூல்களை எரிப்பது அவமரியாதையான செயற்பாடு’ என அவர் கூறியுள்ளார்.

அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தின் பேச்சாளர் நெட் பிரைஸ், செய்தியாளர்களிடம் பேசுகையில், பலருக்கு புனிதமானதாக உள்ள நூல்களை எரிப்பது மிகவும் அவமரியாதைக்குரிய செயற்பாடு. இது வெறுக்கத்தக்கது’ என்றார்.

நேட்டோ அமைப்பில் இணைவதற்கு அதன் அங்கத்துவ நாடான துருக்கியின் ஆதரவை சுவீடன் கோரியுள்ளது.

இந்நிலையில், புனித குர் ஆன் எரிப்பு நடவடிக்கையானது துருக்கிக்கும் சுவீடனுக்கும் இடையில் விரிசலை ஏற்படுத்த விரும்புவர்களின் சதியாக இருக்கலாம் எனவும் நெட்பிரைஸ் கூறியுள்ளார்.

Back to top button